Tuesday, September 18, 2012

இடிந்த கரையும்! ஒடிந்த குரலும்!

சில காலம் முன்பு அணு உலையை தீவிரமாக எதிர்த்தவன் நான். கூடங்குளம் அருகே உள்ள ராதாபுரம் எனது தோழனின் சொந்த ஊர். ஆனால் இடிந்த கரையில் செய்வது போல ராதாபுரத்தில் எந்த போராட்டமும் நடக்கவில்லை என அவர் சொன்னது எனக்கு பெரும் வியப்பைத் தந்தது. இடிந்த கரையைத் தவிற கூடங்குளத்தை சுற்றி உள்ள மற்ற கிராமங்கள் அணு உலையை ஆதரிப்பதாக அவர் மேலும் சொன்னது என்னை திகைப்புற வைத்தது. ஆனால் அணு உலைக்கு ஆதரவு தந்தவர்களின் குரல்கள் ஏன் யாருக்கும் கேட்கவில்லை? யோசித்துப் பார்த்தால் விடை மட்டும் அல்ல ஒரு கவிதையும் வந்தது.





இடிந்த கரையும்! ஒடிந்த குரலும்!

அணுக்கழிவை எதிர்த்து நான் உங்கள்
   அரசியல் கழிவு ஆகிட‌ மாட்டேன்!

இடிந்தகரையை காணும் கண்கள் ‍ எங்கள்
   ஒடிந்த வாழ்வை காண்பது இல்லை
துடுப்பு பிடித்தே வாழும் மக்களின்
  துடிப்பை தூண்டி ஏமாற்றி விட்டனர்

ராட்சத காமிரா கொண்டு வருவோர்க்கு
  ராதாபுரத்தின் நிலை என்ன தெரியும்?
படித்த விஞ்ஞானி சொல்வது தவறென‌
   வடித்த பொய்யை இங்கு ஏற்கவில்லை

அடுப்புக்கும் வழியில்லை, எம் பிள்ளை
  படிப்புக்கும் வழியில்லை; அரசியல் நடிப்புக்கு
இடிந்தகரை வீழ்ந்ததனால் காண்பார் உண்டு,
  வீழாத ராதாபுரத்தை யார் காண்பாரோ?


                                                                   -குழலவன்

Sunday, September 16, 2012

உலையை உருட்டாதே

இடிந்த கூரையை அடுத்த உலையை
   மீசை பூனை கவிழ்க்குமோ?

அலையைக் காட்டி உலையை அணைக்கும்
   காலம் என்று மாறுமோ?

ஏழை வயிறு பெற்ற மக்களின்
   அறியாமை என்று விலகுமோ?

ஏழைகள் அண்டும் உலையை உருட்டி
   உண்போர் உணவு செரிக்குமோ?

நான் பூனையைக் கண்டு நோவதா?
    இல்லை உலையை கட்டிக் கொள்வதா?
அறியா மக்களை பெற்று எடுத்தவள்
    உலை கஞ்சியையும் துறப்பதா?

                ‍                        -குழலவன்

போராளி !!

ஊரை அடித்து
  உலையில் போட்டவன் ...
     காவாலி!!

உலையை அடித்து
 ஊருள் போட்டவன் ...
   போராளி !!


முதலாவது அடுப்பு உலை!
இரண்டாவது அணு உலை!

                      -குழலவன்

Wednesday, May 2, 2012

கரம்இணைவோம் ! குரல்கொடுப்போம்!

தோத்திரம் சொல்லும் தோழர்களும் ‍‍- நல்
தொழுகை செய் சகோதரரும்
நாரணன் சிவன்தொழு ஞானியரும்
ஜன்லோக்பால் கேட்டிட கரம்இணைவோம்

வாழிய பாரத தேசமென்றும் - ‍புகழ்
ஓங்கிடும் நாளும் பாரில் வரும்
ஊழல் லஞ்ஜம் துன்பமெல்லாம்
ஜன்லோக்பால் வந்திட ஓடிவிடும்

முக‌சிரிப்பின் சுறுக்கங்கள் விரிவடைய‌ - பாழ்
கருப்புப் பணமோ கசங்கிவிட‌
ஏழைகள் வாழ்வு எழுச்சிபெற‌
ஜன்லோக்பால் கேட்டே குரல்கொடுப்போம்

                                                             - குழலவன்

இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog

Tuesday, January 31, 2012

தண்ணீர்ப் புதையல்!!!



முண்டி அடித்து, நெற்றி வியர்த்து,
கண்ட இடமெல்லாம் கால் தேயத் தேடி ...
இண்டு இடுக்கிலும், அகன்ற பரப்பிலும்,
குண்டு குழியிலும், நண்டு வளையிலும் தேடி ....
மொண்டு எடுத்த அரை குவளை நீரால்
தொண்டை நனைக்காமலே கூறினான் தமிழக விவசாயி
"அப்பாடா இந்த தண்ணீரை வைத்து வயிற்றில் கட்டும்
ஈரத் துணியையாவது நனைக்கலாம்"!!

‍-குழலவன்


இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog